ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் தனது கட்சி பதவியை பயன்படுத்தி
அரசு அதிகாரிகளை அச்சுறுத்தியும், கிராம மக்களை அச்சுறுத்தியும்
மலைகள், பாறைகள், கல்லாங்குத்து ஆகிவற்றை அரசின் அனுமதியின்றி வெட்டியெடுத்து பல
இடங்களில் பூமிக்கடியில் நீர்மட்டத்தை தாண்டிய ஆழத்திலும் சக்திவாய்ந்த வெடிகளை
வைத்து கல் குவாரிகளை இயக்கி வருகின்றனர்.
அனுமதி மறுக்கப்பட்டும் கல் குவாரி இயங்குகிறது
இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஏற்கெனவே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதிலில் 12.03.2021 அன்றே
மேற்குறிப்பிட்ட குவாரி உரிமையாளருக்கு கனிம வளத்துறையால் அனுமதி மறுக்கப்பட்டு
அக்குவாரி உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது
என்று உறுதியளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து திருப்பெயர் கிராமத்தில் இயங்கிவந்த அக்குவாரி
உரிமையாளரின் கல் குவாரியும் மூடப்பட்டது.
ஆனால் தமிழ்நாட்டின் 2021 பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாள் முதலே அக்குவாரி உரிமையாளர் திருப்பெயர்
கிராமத்தில் கல் குவாரியை இயக்கத் தொடங்கி விட்டார், அதுவும் முன்பு இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த
வெடிகளை நிலத்தடி நீர் மட்டத்தை தாண்டிய ஆழத்திலே வைத்து வருகிறார். இதனால் திருப்பெயர், திருப்பெயர் தக்கா மற்றும் அதன்
சுற்றுப்புற கிராமங்களான சிறுவத்தூர், பரிந்தல், எடைக்கல் ஆகிய கிராமங்களின்
இருப்பிடங்கள் வரை அதிர்வு ஏற்பட்டு பல வீடுகள் விரிசலும் அடைந்து வருகின்றன.
ஆளும் கட்சியின் பெயரையும், அந்நபரின் கட்சி
பொறுப்பையும் துஷ்பிரயோகம் செய்து கற்களை திருடிச்செல்வதோடு நில்லாமல் அப்பகுதியின்
சுற்றுப்புறத்தையும் (நிலத்தடி நீர் உட்பட) சீரழித்து
வருகிறார்.
திருடு கண்டுபிடிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை
இதில் பேரதிர்ச்சி என்னவென்றால் மேற்குறிப்பிட்டுள்ள நபர் அரசுக்குத் தெரியாமல் 4,19,061 Cu.mt (கன மீட்டர்) அளவுகொண்ட சாதாரண கற்களை வெட்டி திருடிச்சென்றுள்ளார் என்ற உண்மையை கனிம வளத்துறை கண்டுபிடித்து திருக்கோவிலூர் கோட்டாசியருக்கு மேற்கண்ட நபர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த பிறகும் இரவு பகல் பாறாமல் மேற்கண்ட நபர் கனிமத்தை திருடுவதையும், சுற்றுச்சூழலை அழிப்பதையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
புகார்களுக்கு நடவடிக்கை இல்லை
வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பொதுமக்கள்
புகார் அளித்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத்தகைய
அவலத்தால் சட்டத்தின் ஆட்சி ஆளும் கட்சியின் ஆட்சிக்கு முன் தோற்றுவிடுமோ என்று மக்களுக்கு
ஐயம் ஏற்பட தொடங்கிவிட்டது.
கோரோனா காலத்திலும் சுற்றுச்சூழலை மாசாக்கிவரும் இத்தகைய நபர்கள் மீது ஆளும் கட்சியான திமுக, தனது கட்சியின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும், சட்டத்தின் ஆட்சியை வலுவிழக்க வைக்கும் வகையிலும் நடந்துகொண்டு வரும் நபரின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது அவசியமாகிறது.
ஆளும் கட்சி அவசியத்தை உணராமல் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் சட்டத்தின் ஆட்சி எதிர் (Vs) ஆளுங்கட்சியின் ஆட்சி என்ற இந்த போட்டியில் சட்டத்தின் ஆட்சி வெல்ல வேண்டும் என்ற முயற்சியோடு எனது
சட்டப் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
சட்டத்தின் ஆட்சியை
நிலைநாட்டி ஆளுங்கட்சியின் ஆட்சிதான் நடக்கிறது என்ற மம்மதையில் மிதப்போருக்கு இனி
வரும் காலங்களில் சிறந்த பாடம் புகட்டும் காலம் விரைவில் வரும். திருப்பெயர் கிராமம் புத்துணர்வு
பெறும்.
#கல்குவாரி #சுற்றுச்சூழல்
#ஆளும்கட்சி #சட்டத்தின்ஆட்சி