பணியிடத்தின் கண்ணியம் காத்திட பாலியல் துன்புறுத்தல் (தடுத்தல், தடை மற்றும் குறைதீர்ப்பு) 2013 சட்டத்தை செயல்படுத்துங்கள்
பொதுவாக சட்டத்தின் ஆட்சிக்குட்பட்டு நிறுவனங்களை நடத்துவதால் தேவையில்லாத பல பிரச்சனைகளை வருமுன் தடுக்கலாம். ஆனால் நமது நாட்டில் சட்டதிட்டங்கள் தெரியாமலும், தெரிந்தாலும் அதனுடைய முக்கியத்துவத்தை உணராமலும் பல்வேறு நிறுவனங்கள் சிறு, குறு முதல் பெரிய நிறுவனங்கள் வரை இயங்கி வருவது அனைவ்ரும் அறிந்ததே. அத்தகைய கண்டுகொள்ளப்படாத சட்டங்களில் ஒன்றுதான் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுத்தல், தடை மற்றும் குறைதீர்ப்பு) சட்டம், 2013. ஆங்கிலத்தில் The Sexual Harassment at Workplace (Prevention, Prohibition and Redressal) Act,2013 (POSH ACT) என்பார்கள்.
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்
பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்களில்
ஈடுபடுவோருக்கு தகுந்த தண்டனை வழங்கவும், எதிர்காலத்தில் பணியிடங்களில் பாலியல்
சீண்டல் சம்பவங்கள் ஏற்படாத வண்ணம் தடுக்கவும், அத்தகைய
செயல்களுக்கு தடைவிதிக்கவும் துரித நடவடிக்கை எடுக்க ஏதுவாக 10-க்கும்
மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் உள்புகார் குழு (INTERNAL COMMITTEE) அமைக்கப்பட வேண்டும். அதேபோன்று பத்துக்கும் கீழே உள்ள
பணியாளர்களைக் கொண்டு இயங்கும் நிறுவனங்களிலிருந்து பெறப்படும் பாலியல் சீண்டல்கள்
குறித்த புகார்களை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் குழு LOCAL COMMITTEE அமைக்கப்பட வேண்டும். இக்குழுவை நியமிப்பது அரசின் கடமையாகும்.
ஆனால் இச்சட்டத்தின்படி மேற்கண்ட குழுக்கள் முறையாக
அமைக்கப்படாத காரணத்தால் பணியிடங்கள் பலவற்றில் பாலியல் சீண்டல்களால் பெண்கள்
(குழந்தைகள் உட்பட) பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். சமீப காலத்தில் பள்ளிகளில்
பயிலும் குழந்தைகளும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகி பாதிப்படைந்து வருகின்றனர்
என்ற செய்திகள் அதிகரித்துகொண்டே வருகின்றன.
இச்சட்டம் குறித்து ஒரு புறம் அறியாமையினாலும் மற்றொறு
புறம் இச்சட்டம் குறித்து தவறான புரிதல்களாலும் பல நிறுவனங்கள் உள்புகார்
குழுக்கள் இல்லாமல் இயங்கி வருகின்றன. இத்தகைய சூழலால் பணியாளர்களிடையே பாலியல்
சீண்டல் குறித்த விழிப்புணர்வு ஏற்பாடாமல், பெண்களுக்கு
எதிராக பாலியல் சீண்டல்கள் தொடர் கதையாகி வருகிறது.
உள்புகார் குழு குறித்த தவறான புரிதல்
தமிழகத்தில் பல ஆயிரம் நிறுவனங்கள் 10 க்கும்
மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. ஆனால் அவைகள் அனைத்தும் சட்டப்பபடி
உள்புகார் குழுவை அமைதுள்ளனவா என்றால் நிச்சயமாக இல்லை என்று குறிப்பிடும்
அளவிற்குத்தான் தற்போதைய நிலை உள்ளது. காரணம் அத்தகைய குழுவை அமைத்தால் பெண்கள்
பொய்யான புகார்களை அளிப்பார்கள் என்ற அச்சமும், நிறுவனத்திற்கு வீண் செலவு என்றும் அபத்தமான
அச்சம் கொள்கின்றனர் நிறுவன உரிமையாளர்கள். ஆனால் அத்தகைய நிறுவனங்களை
நிர்வகிப்பவர்களுக்கு புரிவதில்லை உள்புகார் குழு அமைப்பதன் மூலம் தனது
நிறுவனத்தின் கண்ணியத்தையும் அங்கு பணிபுரிபவர்களின் கண்ணியத்தையும் காப்பாற்றலாம்
என்று.
சில நிறுவனங்கள் இக்குழுவை அமைப்பதனால் எந்த பயனும் இல்லை
என்று மெத்தனம் காட்டுகின்றன. ஆனால் அந்நிறுவனங்களை நிர்வகிப்பவர்களுக்கு புரிவதில்லை
பணியிடத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் நடைபெறாத வண்ணம் தடுப்பதன்
மூலம் தேவையில்லாத அவப் பெயரை தடுக்க முடியும் என்று. ஒரு சிறந்த நிறுவனத்தின்
அடையாளம் என்பது தேவையில்லாத பிரச்சனைகளை வருமுன் தடுப்பதும், அத்தகைய
பிரச்சனைகள் வருமாயின் முறையான தீர்வு காண்பதும்தான். எனவே நிறுவனத்தின்
பெயருக்கும், பணியாளர்களின் கண்ணியத்திற்கும், பாதுகாப்பிற்கும் கலங்கம் விளைவிக்கக் கூடிய பாலியல் சீண்டல் சம்பவங்களை தடுக்கவும், தீர்வுகாணவும் உள் புகார் குழு இன்றியமையாததாகும்.
பாலியல் சீண்டல்கள் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பணியிடங்களில் POSH சட்டம் குறித்து பயிற்சி பட்டரை, விழிப்புணர்வு வகுப்புகள் போன்றவற்றின் மூலம் எத்தகைய செயல்களெல்லாம் பாலியல் சீண்டல்களாக கருதப்படும் என்றும், பாலியல் சீண்டல்களுக்கு ஆளானவர்கள் எந்த வகையில் யாரிடம் புகார் அளித்து பரிகாரம் பெற்றுக்கொள்ளலாம் போன்றவற்றை பணியாளர்களுக்கு கற்பிப்பது ஒவ்வொரு தனியார் மற்றும் அரசு நிறுவனத்தின் (பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து நிறுவனங்களின்) கடமையாகும்.
அனைத்து பணியிடங்களிலும் பாலியல் துன்புறுத்தல் தடுத்தல், தடை மற்றும் குறைதீர்ப்பு சட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டால் பணியிடத்தின் கண்ணியமும், பணியாளர்களின் கண்ணியமும் பாதுகாக்கப்படும். தேவையில்லாத பிரச்சணைகள் தடுக்கப்பட்டு நிறுவனங்கள் தங்களது பணிகளில் தங்கு தடையின்றி கண்ணியத்தோடு செயல்படும்.
எனவே வாருங்கள் சட்டத்தின் ஆட்சி
மூலம் பணியிடங்களில் பெண்களின் கண்ணியத்தோடு நிறுவனத்தின் கண்ணியத்தையும் காத்திடலாம்!!!
#பணியிடம் #பாலியல்சீண்டல்கள் #துன்புறுத்தல்#உள்புகார்குழு
இது சம்மந்தமான மேலும் கட்டுரைகள்:
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உள்ளூர் குழு மூலம் நீதி