ஆற்று மணலை அபகரித்து, ஏரி மண்ணையும்
வெட்டியெடுத்து , ஏரிக்கு
செல்லும் ஓடைகளை நாசமாக்கி , ஏரி ,
விவசாய நிலம் மற்றும் காடுகளை ஒட்டி உள்ள
பகுதிகளில் உள்ள கருங்கற்களை வெட்டியெடுத்து பணம் சம்பாதிப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாக
செயல்படும் ஒரு சில நபர்களால் கிராமங்களில் மட்டும் கிடைத்த சுத்தமான குடிநீரும்,
சுத்தமான காற்றும் நாளுக்கு
நாள் அரிதாகிக் கொண்டே வருகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அத்தகைய நபர்களுக்கு
அரசு அதிகாரிகளும் உடைந்தையாக இருந்துகொண்டு நமது நாட்டிற்கும் நமது மக்களுக்கும் மிகப்பெறிய துரோகம் செய்து வருகின்றனர்.
பணம் சம்பாதிப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக்
கொண்டு வாழ்ந்து வரும் அத்தகைய கயவர்களையும் அதற்கு துணையாக நிற்கும் துரோகிகளையும் தண்டித்து
கிராமங்களை காப்பாற்றுவது மிகவும் அவசியமாகும்.
சுத்தமான நீர் கிடைக்குமா?
ஒரு சில நபர்களின் பேராசையால் தற்போது தமிழ்நாட்டில் பல ஆறுகளில் கட்டுப்பாடின்றி
மணல் எடுத்ததால் தற்போது ஆற்றில் மணல் அல்லவே தடை என்ற நிலை வந்துவிட்டது. காரணம் எப்படியேனும்
பணத்தை சம்பாதித்துவிட வேண்டும் என்ற அற்ப ஆசை. அதே போன்று தற்போது கிராமங்களில் உள்ள
ஏரிகளையும் விட்டுவைக்கவில்லை. ஏரிக்கு செல்லும் ஓடைகளை நாசமாக்கி அங்கே உள்ள மண் மற்றும்
கற்களை வெட்டியெடுத்து அவைகளையும் விற்று பணம் சம்பாதிக்க முற்பட்டுவிட்டனர் ஒரு சில
மூடர்கள்.
ஆற்று நீர்பாசனம் இல்லாத கிராமங்களில் ஏரி நீர் பாசனத்தை நம்பிதான் விவசாயமே
நடந்துவருகிறது. இந்நிலையில் அத்தகைய ஏரியில் உள்ள மண்ணை வெட்டியெடுத்து அதையும் விற்று
சம்பாதிக்கும் அற்ப வேலையில் இறங்கியுள்ளனர் ஒரு சில துரோகிகள். இதனால் விவசாயத்திற்கான
நீர் ஆதாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நிலத்தடி நீறும் கீழே சென்றுவிட்டது.
இத்தகைய நிலை நீடித்து வருமானல் தற்போது சுத்தமான குடிநீரை பருகிவரும் பல கிராமங்கள்
தண்ணீர் பாட்டில்களை நம்பிதான் இருக்க வேண்டி வரும்.
சுத்தமான காற்றும் கேள்விக்குறியே?
கிராமம் என்றாலே நினைவுக்கு வருவது சுத்தமான காற்றுதான். ஆனால் அதுவும்
இப்பொழுது கேள்விக்குறியாகிவிட்டது. ஒரு சில நபர்களின் பேராசையாலும், ஒரு சில நம்பிக்கை துரோகிகளாலும் (அரசு
அதிகாரிகளாலும்) கருங்கற்களை வெட்டியெடுக்கும் பெயரில் சக்தி வாய்ந்த வெடிகளை வைத்தும்,
வெட்டியெடுத்த கற்களை அரைப்பதற்காக ராக்க்ஷச இயந்திரங்களை இயக்கி புகைகளைக் கக்கி கிராம
சுற்றுப்புரத்தையே மாசு அடைய வைக்கின்றனர். விவசாய நிலத்தில் உள்ள பயிர்கள் புகையின் மூலம் வெளியேற்றப்பட்ட
ரசாயன துகள்களாக காட்சியளிக்கின்றன. இதன் மூலம் கிராமத்தில் வாழும் மனிதர்களும் அசுத்தமான
காற்றை சுவாசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நாம் நகரத்திலிருந்து நமது கிராமங்களுக்கு செல்லும்போதெல்லாம் இயற்கையின்
மடியைத் தேடி செல்கின்ற உணர்வுகள் இருந்தது. ஆனால் அத்தகைய நிலை தற்போது பல கிராமங்களில்
மாறி வருகிறது. ஒரு சில பேராசைக்காரர்களாலும், நமது வரிப்பணத்தில் சம்பளம் வங்கிக்கொண்டு நமக்கு துரோகம்
செய்து வரும் ஒரு சில அரசு அதிகாரிகளாலும் நாம் நமது கிராமத்தின் பெருமைகளான ஆறு,
ஏரி, ஓடை, குட்டை, மலைகள்,
பாறைகள், காடுகள் ஆகியவற்றை இழந்துகொண்டு வருகிறோம். கூடவே
சுத்தமான காற்றையும், குடிநீரையும்
சேர்த்தே இழந்து வருகிறோம். எனவே அத்தகைய செயல்களில் ஈடுபட்டுவரும் கயவர்களை கண்டறிந்து
சட்டத்தின் முன் அவர்க்ளை நிறுத்தி நமது கிராமங்களின் அடையாளங்களை காப்பது நம்மில்
ஒவ்வொருவரின் கடமையாகும். இதனை நாம் செய்ய தவறிவிட்டால் நமது குழந்தைகளுக்கு ஏரி என்று
காட்ட ஏரி இருக்காது, கிணற்றில்
நீரை காட்ட நீர் இருக்காது, மலை என்று
காட்ட மலை இருக்காது, ஓடை என்றால்
என்ன என்று புரிய வைக்க ஓடையே இருக்காது. எனவே இவைகளைக் காப்பாற்றுவது நமது கடமையாகும்.
#காற்று #நீர்# ஆறு #ஏரி #ஓடை #குட்டை #மலைகள்#பாறைகள் #காடுகள்
#சுற்றுச்சூழல் #கிராமம்
குறிப்பு: சி.பிரபு, கிராமங்களின் சுற்றுச்சூழலுக்கு தீங்கு
விளைவிக்கும் கயவர்களுக்கு எதிராகவும் அவர்களுக்கு துணைபோகும் துரோகிகளுக்கு எதிராகவும் வழக்காடும் வழக்கறிஞர்.